Wednesday, December 31, 2008

பாடல் -7

அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்;
இதுஅவன் திருவுரு, இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தரகோச
மங்கையுள் ளாய்! திருப் பெருந்துறை மன்னா!
எதுஎமைப் பணிகொளும் ஆறு? அது கேட்போம்;
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!

பொருள்:

தேன்சொரியும் மலர்ச்சோலை சூழ்ந்த திருவுத்தரகோச மங்கைத் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவனே! திருப்பெருந்துறை அரசே! உன் தன்மையாகிய அது பழச்சுவை எனவும், அமுதம் எனவும், அறிந்துகொள்ள எளிமையானது எனவும் தேவர்களும் அறியமாட்டார்கள். ஆனால், "இதுவே அவனுடைய திருவுருவம், எவனே அந்தச் சிவபெருமான்" என்று நாங்கள் சுட்டிக்காட்டிச் சொல்லும்படி கருணையுடன் எங்களை அடிமையாக ஏற்றுக்கொண்டு இந்த மண்ணிலே எழுந்தருள்வாய்! நீ எங்களை ஏவல் கொள்ளும் முறைமை எது? அந்த முறைமையைக் கேட்டு அவ்வாறே ஒழுகுவோம்! எம்ப பெருமானே! பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக!

No comments:

Post a Comment