Sunday, December 21, 2008

பாடல் -5

பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா!
சிந்தனைக் கும்அரி யாய்! எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!

பொருள்:


ஐம்பூதங்களிலும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன், போக்கும் வரவும் இல்லாதவன் என்றெல்லாம் உன்னைப் புலவர்கள் புகழ்கின்றனர். பக்தி மேலீட்டால் சிலர் பாடுகின்றனர், சிலர் ஆடுகின்றனர். ஆனால் உன்னை நேரே பார்த்தறிந்தவர்கள் யாரையும் நாங்கள் கேள்விப்படவில்லை. குளிர்ந்த, பசுமையான வயல்கள் சூழ்ந்த, திருப் பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே! நினைத்தற்கும் அருமையானவனே! நாங்கள் உன்னை நேரே காணும்படி பள்ளி எழுந்தருள்வாய்!

No comments:

Post a Comment